நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர்.
Transliteration
naaNaal uyiraith thuRappar uyirpporuttaal
naaNdhuRavaar naaNaaL pavar.
🌐 English Translation
English Couplet
The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake.
Explanation
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
2 மணக்குடவர்
நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர். இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.
3 பரிமேலழகர்
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நாண் ஆள்பவர்-நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணால் உயிரைத் துறப்பர் -நாணும் உயிருந் தம்முள் மாறானவிடத்து நாணைக் காத்தற் பொருட்டு உயிர் நீப்பர் ; உயிர் பொருட்டு நாண் துறவார் - உயிரை காத்தற் பொருட்டு நாணினை நீக்கார். 'உயிரினும் நாண் சிறந்த்தென்பது கருத்து. உயிரினும் சிறந்தன்று நாணே.' (தொல், கள 22) இவ்விரு குறளாலும் நாணுடையார் செயல் கூறப்பட்டது. 'ஆல் ' அசைநிலை.
5 சாலமன் பாப்பையா
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
6 கலைஞர் மு.கருணாநிதி
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
7 சிவயோகி சிவக்குமார்
தவறு செய்ய அஞ்சும் நாணுடைமை கொண்டமையால் உயிரை துறப்பார்கள். உயிர் வாழ வேண்டி நாணுடைமையை துறக்காதவரே நாணுடைமை ஆள்பவர்.
8 புலியூர்க் கேசிகன்
நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாத போது, சான்றோர்கள் உயிரை விட்டு விடுவார்கள்; உயிரைக் காப்பதற்கு நாணத்தை விட மாட்டார்கள்.
More Kurals from நாணுடைமை
அதிகாரம் 102: Kurals 1011 - 1020
Related Topics
Because you're reading about Modesty