Kural 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

naaNaamai naadaamai naarinmai yaadhondrum
paeNaamai paedhai thozhil.

🌐 English Translation

English Couplet

Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
Nought cherishing, 'tis thus the fool will play his part.

Explanation

Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

2 மணக்குடவர்

நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.

3 பரிமேலழகர்

நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நாணாமை - வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்; நாடாமை - ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்; நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்; யாது ஒன்றும் பேணாமை -பேணிக்காக்க வேண்டிய எதையும் காவாமையும்; பேதை தொழில் - பேதை செயல்களாம். வெட்கப்பட வேண்டியவை பழிகரிசுகள் (பாவங்கள்). ஆராய வேண்டியவை நல்லனவும் தீயனவும் வேண்டுவனவும் வேண்டாதனவும். பேணவேண்டியவை குடிப்பிறப்பு, தன்மானம், ஒழுக்கம், கல்வி, நல்நட்பு முதலியன. இயற்கைக் குணம் அல்லது வழக்கச் செயல் என்பது பற்றித் 'தொழில்' என்றார். 'பேதை' இருபாற்பொது.

5 சாலமன் பாப்பையா

தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

வெட்கப்படாமை, வேட்கையோடு தேடாமை, இனிமையாக இல்லாமை, எந்த ஒன்றையும் பாதுகாக்காமை, போன்றவைகள் பேதையின் தொழிலாகும்.

8 புலியூர்க் கேசிகன்

பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்புகொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும்.

More Kurals from பேதைமை

அதிகாரம் 84: Kurals 831 - 840

Related Topics

Because you're reading about Folly

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature