நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.
Transliteration
nalkuravu ennum idumpaiyuL palkuraith
thunpangaL sendru padum.
🌐 English Translation
English Couplet
From poverty, that grievous woe,
Attendant sorrows plenteous grow.
Explanation
The misery of poverty brings in its train many (more) miseries.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
2 மணக்குடவர்
வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும். இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.
3 பரிமேலழகர்
நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும். (குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நல்குரவு என்னும் இடும்பையுள்-வறுமையென்று சொல்லப்படும் ஒரு துன்பத்துள்ளே; பல் குரைத் துன்பங்கள் சென்று படும்-பல பெருந்துன்பங்கள் வந்து சேரும். பொருளில்லார்க் கிவ்வுலக மில்லையாதலால் வறுமையே துன்ப நிலைமையாம். நுகர்ச்சிப் பொருள்களின்மை யாகிய துன்பத்தினால், பெற்றதாயும் விரும்பாமை, மனைவியின் சுடுசொல், மக்கள் உணவின்றிப் படுந்துன்பம், வெயிற்கும் மழைக்கும் பாதுகாப்பின்மை, உறவும் நட்புமின்மை, கற்ற கல்வி பயன்படாமை, ஈயென இரத்தல், இரந்தும் பெறாமை, பெற்றும் போதாமை, ஈவாரைத் தேடியலைதல், கவலை கரைகடத்தல் முதலிய பல்வேறு பெருந்துன்பங்கள் விளைவதால், ’பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ என்றார். சென்று படுதல் தாமே வந்து சேர்தல். குரை-பெருமை. ’’ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப ,’’ என்று தொல்காப்பியங் கூறுவதால் (சொல்,இடை,24) பரிமேலழகர் ’’குரை இசைநிறை.’’ என்றார்.
5 சாலமன் பாப்பையா
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.
7 சிவயோகி சிவக்குமார்
இல்லாமை என்ற வேதனையுள் பல வகைக் குறைபாடுகள் கொண்ட துன்பங்கள் கூடி விடும்.
8 புலியூர்க் கேசிகன்
வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே, உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.
More Kurals from நல்குரவு
அதிகாரம் 105: Kurals 1041 - 1050
Related Topics
Because you're reading about Poverty