நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.
Transliteration
nanavinaal namneeththaar enpar kanavinaal
kaanaarkol ivvoo ravar.
🌐 English Translation
English Couplet
They say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town.
Explanation
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.
2 மணக்குடவர்
இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?. இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இவ்வூரவர் நனவினால் நந்நீத்தார் என்பர் - இவ்வூர் மகளிர் நனவின்கண் நம் காதலர் நம்மைக் கைவிட்டாரென்று கொடுமை கூறுவர்; கனவினாற் காணார் - ஆனால், அவர் கனவின் கண் தப்பாது வருதலை என்போலக் கண்டறியார். தன்னொடு தோழிக்குப் பிறசெய்திகளிற் கருத்து வேற்றுமை யின்றேனும், அவள் தலைமகனைப் பழித்தலைச் சற்றும் பொறாளாதலின், 'இவ்வூரவர்' என அயன்மைப்படுத்திக் கூறினாள். 'கொல்' அசைநிலை. மூன்றனுருபுகள் முற்கூறியனவே.
5 சாலமன் பாப்பையா
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.
6 கலைஞர் மு.கருணாநிதி
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?.
7 சிவயோகி சிவக்குமார்
நனவினால் நம்மை பிரிந்து இருப்பவர்கள் என்று சொல்கிறார்கள் கனவினால் உறவாடுவதை காணாத இவ்வூர் மக்கள்.
8 புலியூர்க் கேசிகன்
‘நனவிலே நம்மைவிட்டுப் பிரிந்து போனார்’ என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல் கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ?
More Kurals from கனவுநிலையுரைத்தல்
அதிகாரம் 122: Kurals 1211 - 1220
Related Topics
Because you're reading about Dreams of Love