நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து.
Transliteration
Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal
Anjudhum Vepaak Karindhu.
🌐 English Translation
English Couplet
Within my heart my lover dwells; from food I turn
That smacks of heat, lest he should feel it burn.
Explanation
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
2 மணக்குடவர்
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
காதலவர் நெஞ்சத்தாராக - எம் காதலர் எப்போதும் எம் நெஞ்சினுள் ளிருக்கின்றாராதலால் ; வேபாக்கு அறிந்து - அவர் சூடுறுதலை யறிந்து ; வெய்துஉண்டல் அஞ்சுதும் - வெம்மையாக வுண்ணுவதற்கு அஞ்சுகின்றேம் எப்போதும் எம்நெஞ்சிலிருக்கின்றவரைப் பிரிந்தாரென்று கருது வதென்னை என்பது குறிப்பெச்சம் , ' வேபாக்கு ' தொழிற்பெயர் ; 'பாக்கு ' தொழிற்பெயரீறு .
5 சாலமன் பாப்பையா
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.
6 கலைஞர் மு.கருணாநிதி
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
7 சிவயோகி சிவக்குமார்
நெஞ்சில் நிறைந்து என் காதலர் இருக்க சூடாக உண்ண அஞ்சுகிறேன் வெப்பம் தாக்கும் என்பதை அறிந்து.
8 புலியூர்க் கேசிகன்
காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கின்றார்; அதனால், அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்!
More Kurals from காதற்சிறப்புரைத்தல்
அதிகாரம் 113: Kurals 1121 - 1130
Related Topics
Because you're reading about Excellence of Love