Kural 336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

nerunhal uLanoruvan indrillai ennum
perumai udaiththuiv vulagu.

🌐 English Translation

English Couplet

Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.

Explanation

This world possesses the greatness that one who yesterday was is not today.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

2 மணக்குடவர்

ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.

3 பரிமேலழகர்

ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்! உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும், இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத்திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறினைச் சொல்லாலன்றி ' ஒருவன் ' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையானும், வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள் நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள் என்று பட்டினத்தடிகள் பாடியது போல், "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ளதன்றாம். ' ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். ' பெருமை' என்றது எதிர்ப்பொருளணி (Irony) யாதலால், ' நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

ஒருவன் நேற்றைய தினம் இருந்தான். இன்றைய தினம் இல்லாமற் போனான் என்று கூறப்படும் நிலையாமை மிகுதியினை உடையதாகும் இவ்வுலகு.

6 சாலமன் பாப்பையா

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

7 கலைஞர் மு.கருணாநிதி

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

நீண்ட நாட்கள் இருந்த ஒருவர் இன்று இல்லை என்ற பெருமை படைத்தது இந்த உலகம்.

More Kurals from நிலையாமை

அதிகாரம் 34: Kurals 331 - 340

Related Topics

Because you're reading about Impermanence

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature