நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
Transliteration
neruppinuL thunjalum aagum nirappinuL
yaadhondrum kaNpaadu aridhu.
🌐 English Translation
English Couplet
Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.
Explanation
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
2 மணக்குடவர்
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது.
3 பரிமேலழகர்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது-ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது. நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.
5 சாலமன் பாப்பையா
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
6 கலைஞர் மு.கருணாநிதி
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
நெருப்பில் தூங்குவது சாத்தியப்படலாம் நிறைவற்ற நிலையில் எவ்வகையிலும் கண்ணுறக்கம் கொள்வது கடினம்.
8 புலியூர்க் கேசிகன்
மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்த போது, எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.
More Kurals from நல்குரவு
அதிகாரம் 105: Kurals 1041 - 1050
Related Topics
Because you're reading about Poverty