Kural 1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ninandheeyil ittanna nenjinaarkku undoa
punarndhoodi niRpaem enal.

🌐 English Translation

English Couplet

'We 'll stand aloof and then embrace': is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away?.

Explanation

Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

2 மணக்குடவர்

தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு- கொழுப்பைத் தீயிலிட்டால் உருகுவதுபோலக் காதலரைக் கண்டவுடன் நிறையழிந்துருகும் உள்ளத்தையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ- அவர் அணுகி நிற்க யாம் ஊடி அந்நிலையிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உளதோ? இல்லையே! யான் அத்தன்மையே னாகலின் அந்நிலைமையில்லை யென்பதாம் புணர்தல் தலைக்கூடி நிற்றல். அவர் புணர்ந்து, யாம் ஊடிநிற்பேம் என்பது, மணியடித்து வண்டி புறப்பட்டது என்றாற்போன்ற தனிநிலைக் கிளவியச் (absolute clause) சொல்லியமாம் (sentence).

5 சாலமன் பாப்பையா

கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.

6 கலைஞர் மு.கருணாநிதி

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

7 சிவயோகி சிவக்குமார்

கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சினார்க்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.

8 புலியூர்க் கேசிகன்

தீயிலே கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, ‘இசைந்து ஊடி நிற்போம்’ என்று, ஊடும் தன்மைதான் உண்டாகுமோ!

More Kurals from நிறையழிதல்

அதிகாரம் 126: Kurals 1251 - 1260

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature