நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்.
Transliteration
Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam
Maraiyirandhu Mandru Patum.
🌐 English Translation
English Couplet
In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.
Explanation
I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
2 மணக்குடவர்
யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
யான் நிறையுடையேன் என்பேன்- இதற்கு முன்பெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும்- ஆனால், இன்று என் காமம் கட்டிற்கடங்காது அம்பலப்பட்டுவிட்டது. இனி என் வயத்ததன்று என்பதாம். 'மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரக்கக் குறிப்பு. மன்று படுதல் பலருமறிதல்.
5 சாலமன் பாப்பையா
இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.
6 கலைஞர் மு.கருணாநிதி
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.
7 சிவயோகி சிவக்குமார்
நிறைவானவன் என்றே இருந்தேன் ஏனோ என் மறைக்க முடியா காமம் மறைவாக இருந்து பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.
8 புலியூர்க் கேசிகன்
இதுவரையில் நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன்; ஆனால், என் காமம், என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே!
More Kurals from நிறையழிதல்
அதிகாரம் 126: Kurals 1251 - 1260