நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.
Transliteration
noadhal evanmatru nondhaarendru aqdhariyum
kaadhalar illaa vazhi.
🌐 English Translation
English Couplet
What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?.
Explanation
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.
2 மணக்குடவர்
யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து. இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.
3 பரிமேலழகர்
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் நொந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி - இவர் நம் செயல் பற்றி நொந்தாரென்று அந்நோவினையறியும் அன்புடையார் இல்லாதவிடத்து ; நோதல் எவன் - ஒருவர் நொந்து என்ன பயன் ? இவள் நம் காதலியல்லள் .ஆகலால் நம் நோவறியாள் . ஆகவே, நாம் நோவதாற் பயனில்லை யெனத் தன் ஆற்றாமையுணர்த்தியவாறு. அறிதல்-அறிந்து ஊடல் தீர்தல் மற்று-அசைநிலை .
5 சாலமன் பாப்பையா
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.
6 கலைஞர் மு.கருணாநிதி
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.
7 சிவயோகி சிவக்குமார்
வருத்தம் யாரால் உண்டானது என்று வருந்திட அறியா காதலரை மாற்றிட இல்லை வழி.
8 புலியூர்க் கேசிகன்
‘நம்மாலே இவரும் நோயுற்றார்’ என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாத போது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?
More Kurals from புலவி
அதிகாரம் 131: Kurals 1301 - 1310
Related Topics
Because you're reading about Lovers' Quarrel