Kural 673

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ollumvaa yellaam vinainhandrae ollaakkaal
sellumvaai noakkich seyal.

🌐 English Translation

English Couplet

When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

Explanation

Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.

2 மணக்குடவர்

இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.

3 பரிமேலழகர்

ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. (இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே-இயலுமிட மெல்லாம் போரால் வினைசெய்தல் நல்லதே; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல்-அது இயலாவிடத்து ஏனை மூன்று ஆம்புடைகளுள்ளும் ஒன்றும் பலவும் ஏற்ற வற்றை எண்ணிச் செய்க. வினையென்றது இங்குத் தண்டத்தை. எளிய பகைவரை அடக்குவதும் விரைந்து பொருள் தருவதும் போரேயாகலின், அதை நன்றென்றார். இயலுமிடம் தான் வலியனான காலம்; இயலாவிடம் தான் மெலியனான காலம்; இயல்வது ஐயுறவான இடம் தான் ஒத்தோனான காலம். இயலாக் காலத்தும் ஐயுறவுக் காலத்தும் இன்சொல், பிரிப்பு, கொடை என்னும் ஏனை மூன்று ஆம்புடைகளுள் ஒன்றும் பலவும் ஏற்ற வகையிற் கையாள்க என்றார். ஏகாரம் தேற்றம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தொழில் செய்யும் போது முடிந்த இடத்தில் எல்லாம் தண்டத்தினால், அதாவது போரினால் செய்தல் நன்று. அது முடியாத போது மற்ற வழிமுறைகளினால் செய்தல் நல்லது.

6 சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.

7 கலைஞர் மு.கருணாநிதி

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

செய்யமுடிந்ததை எல்லாம் நன்மைக்காக செய்யுங்கள். முடியாததை முடிப்பதற்கான வழி அறிந்து செய்யுங்கள்.

More Kurals from வினைசெயல்வகை

அதிகாரம் 68: Kurals 671 - 680

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature