ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.
Transliteration
ondraamai ondriyaar katpatin eGnGnaandrum
pondraamai ondral aridhu.
🌐 English Translation
English Couplet
If discord finds a place midst those who dwelt at one before,
'Tis ever hard to keep destruction from the door.
Explanation
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
2 மணக்குடவர்
தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது. இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
3 பரிமேலழகர்
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒன்றியார் கண் ஒன்றாமைபடின் - தனக்கு உள்ளானவரிடத்திலேயே பகைமை தோன்றுமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - ஒருவனுக்கு இறவாமை கூடுதல் எக்காலத்திலும் அரிதாம். அரசனாயின் பொருள் படை நாடு நட்பு முதலியவற்றாலும், பிறனாயின் பொருள் சுற்றம் ஏவல் முதலியவற்றாலும், பெரியவனான காலத்தும் என்பார் ' எஞ்ஞான்றும் ' என்றார். ' ஒன்றாமை யொன்றியார் ' உள்முரண் (Oxymoron) இந் நான்கு குறளாலும் உட்பகையால் தனிப்பட்டவனுக்கும் ஒரு குடும்பத்தலைவனுக்கும் அரசனுக்கும் வருந்தீங்கு கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
தனி வேறு சிந்தை உள்ளவர்கள் கூடி இருக்க அடுத்தவரின் சதியால் பிரிந்தால் எக்காலத்திலும் சிறப்புற கூடி இருப்பது அரிது.
8 புலியூர்க் கேசிகன்
தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.
More Kurals from உட்பகை
அதிகாரம் 89: Kurals 881 - 890
Related Topics
Because you're reading about Internal Enemies