ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
Transliteration
ondraanunh theechchol porutpayan uNtaayin
nandraakaa thaaki vidum.
🌐 English Translation
English Couplet
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.
Explanation
If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
2 மணக்குடவர்
ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.
3 பரிமேலழகர்
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
தீச்சொற் பொருட்பயன் ஒன்றானும் உண்டாயின் - ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின் ; நன்று ஆகாது ஆகிவிடும் - அவன் ஏற்கெனவே செய்துள்ள பிறவறங்கள் பயன்படாமற்போம் . சொற்குற்றம் பொய் , குறளை , கடுஞ்சொல் , பயனில் சொல் என நான்கு என்பர். " ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின் , நன்மை யாகாதாகியேவிடும் " என்னும் மணக்குடவ ருரை பொருந்துவதன்று .
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தீய சொற்களினுடைய தன்மைகளில் பிறருக்கு வருகின்ற துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டாகிவிட்டால் அவனுக்கு பிற நன்மைகளினால் உண்டான பயனும் தீயதாய் ஆகிவிடும்.
6 சாலமன் பாப்பையா
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
8 சிவயோகி சிவக்குமார்
ஒரே ஒரு தீமையான சொல் அதன் அர்த்தம் விளங்கும் பொழுது நன்மைகள் தாராது போகும்.
9 புலியூர்க் கேசிகன்
தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையும் இல்லாமற் போய்விடும்.
More Kurals from அடக்கமுடைமை
அதிகாரம் 13: Kurals 121 - 130
Related Topics
Because you're reading about Self-Control