Kural 1013

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

oonaik kuRiththa uyirellaam naaNennum
nanmai kuRiththadhu saalpu.

🌐 English Translation

English Couplet

All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.

Explanation

As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

2 மணக்குடவர்

பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.

3 பரிமேலழகர்

உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப்பற்றும்; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது- அதுபோலச் சான்றாண்மை நாண் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப் பற்றும். உயிர் உடம்பொடு கூடியல்லது வாழாதது போல, சால்பு நாணோடு கூடியல்லது நடவாது என்பதாம். 'ஊன்' ஆகுபெயர். ' உடம்பு' வகுப்பொருமை. 'நன்மை' ஆகுபொருளது. 'ஊனை' என்று பாடங் கொள்வர் மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர்.

5 சாலமன் பாப்பையா

எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

6 கலைஞர் மு.கருணாநிதி

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

உடல் பெற்ற உயிர்களின் நாணுடைமை என்ற நன்மை தரும் பண்பை பொருத்தே மேன்மை இருக்கும்.

8 புலியூர்க் கேசிகன்

உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒரு போதும் விடமாட்டா; அவ்வாறே ‘நாணம்’ என்னும் குணத்தையும் ‘சால்பு’ ஒரு போதும் விட்டுவிடாது.

More Kurals from நாணுடைமை

அதிகாரம் 102: Kurals 1011 - 1020

Related Topics

Because you're reading about Modesty

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature