ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.
Transliteration
ooravar kavai eruvaaka annaisol
neeraaka neeLum-inh noai.
🌐 English Translation
English Couplet
My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.
Explanation
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
2 மணக்குடவர்
ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.
3 பரிமேலழகர்
(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது. ('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தலைமகன் சிறைப்புறத்தா னாதலறிந்த தோழி, வரைவு காலந் தாழ்த்தலை ஆற்றாளான தலைமகளிடம் ஊரார் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டுமென்று சொன்ன விடத்து, அவள் சொல்லியது] இந் நோய்-இக்காம நோயாகிய பயிர் ; ஊரவர். கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்...இவ்வூர் மகளிர் எடுக்கின்ற அலரை எருவாகவும், அது கேட்டு அன்னை கடிந்து கூறும் வெஞ் சொல்லை நீராகவும் கொண்டு, வளர்கின்றது. நோயைக் தணிக்க வேண்டிய ஏதுக்கள் அதை வளர்த்தே வருகின்றன என்பதாம். தலைமகன் விரைந்து வரைவானாதல் கருதிய பயன். 'ஊரவர்' இங்கு ஆணொழி பொதுச் சொல். நோயைப் பயிரென்று உருவகியாமையால் இது ஒரு மருங்குருவகம்.
5 சாலமன் பாப்பையா
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
7 சிவயோகி சிவக்குமார்
ஊரார் பழிச் சொல் உரமாக அன்னையின் சொல் நிராக நீண்டு வளர்கிறது காமம் என்ற இந்நோய்.
8 புலியூர்க் கேசிகன்
இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச் சொற்களை எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது.
More Kurals from அலரறிவுறுத்தல்
அதிகாரம் 115: Kurals 1141 - 1150