ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
Transliteration
ootarkan sendraen-man thoazhi adhumarandhu
koodarkan sendradhu-en nenju.
🌐 English Translation
English Couplet
My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain.
Explanation
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
2 மணக்குடவர்
தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தேவநேயப் பாவாணர் (இதுவுமது) தோழி-தோழீ ; ஊடற்கண் சென்றேன்-காதலரைக் காணுமுன் அவர் செய்த தவற்றை நினைந்து அவரோடு ஊடுதலை மேற்கொண்டேன் ; என்நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது-ஆனால் , அவரைக் கண்டவுடன் என் உள்ளமோ அதைமறந்து அவரோடு கூடுதலை மேற்கொண்டு விட்டது. அவரைக் கண்டவுடனேயே என் நெஞ்சு அறைபோனமையின் என் தீர்மானம் நிறைவேறவில்லை யென்பதாம். ஊடற்கண் சென்றதனால் என்ன பயன் என்பதுபட நின்றமையின் ' மன் ' ஒழியிசை, ஊடற்கண் சென்றதும் நெஞ்சேயாதலின் ' அது மறந்து' என்றாள் .
5 சாலமன் பாப்பையா
தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.
7 சிவயோகி சிவக்குமார்
பிணக்குடன் பிரிந்து சென்றேன் தோழி ஆனால் அதை மறந்து கூடிட சென்றது என் நெஞ்சு.
8 புலியூர்க் கேசிகன்
தோழி! நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன்; ஆனால் என் நெஞ்சமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே!
More Kurals from புணர்ச்சிவிதும்பல்
அதிகாரம் 129: Kurals 1281 - 1290