ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.
Transliteration
ooti irundhaemaath thumminaar yaamdhammai
neetuvaazh kenpaak karindhu.
🌐 English Translation
English Couplet
One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'.
Explanation
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
2 மணக்குடவர்
தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.
3 பரிமேலழகர்
(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தலைமகன் சென்றபின் வந்த தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்த கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு உரையாடா திருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து - அது எதற்கெனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு. இயல்பாக நிகழ்ந்த தும்மலை வேண்டுமென்று செய்ததாகக் கொண்டதால் (புலவி) நுணுக்கமாயிற்று. தும்மியபோது வாழ்த்துதல் மரபாகலால், உரையாடல் வேண்டியதாயிற்று என்பதாம். ' யாம் ' என்றது அரசப் பன்மை (Royal 'we' ) , அகரந் தொக்கது.
5 சாலமன் பாப்பையா
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).
6 கலைஞர் மு.கருணாநிதி
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து.
7 சிவயோகி சிவக்குமார்
ஊடலாக இருந்த பொழுது தும்மினார் நான் அவரை நீடுவாழ் என்பேன் என்பதை அறிந்து.
8 புலியூர்க் கேசிகன்
காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, ‘நீடுவாழ்க’ என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்!
More Kurals from புலவி நுணுக்கம்
அதிகாரம் 132: Kurals 1311 - 1320
Related Topics
Because you're reading about Subtleties of Sulking