Kural 902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

paeNaadhu peNvizhaivaan aakkam periyadhoar
naaNaaka naaNuth tharum.

🌐 English Translation

English Couplet

Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o'erwhelming shame.

Explanation

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

2 மணக்குடவர்

அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.

3 பரிமேலழகர்

பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இ-ரை) பேணாது பெண்விழைவான் ஆக்கம் -தன் ஆண்மை மேம்பாட்டைக் காவாது தன் மனைவிக்கு அடிமையாகுமளவு அவளைக் காதலிப்பவன் பெற்ற செல்வம்;பெரியது ஓர் நாணாக நாணுத் தரும்-தன்பாலார்க்கெல்லாம் மிகுந்த நாணமுண்டாகுமாறு தனக்கு வெட்கக் கேட்டை விளைவிக்கும். 'ஆக்கம்' என்று அடைகொடாமற் கூறியது,முதுசொம் என்னும் முன்னோர் தேட்டாகவோ மனைவிவழிச் சொத்தாகவோ பெறப்பட்டதென்றுகுறித்தற்கு.பெண்வழிச் செல்வானுக்குப் பொருளீட்டும் ஆற்றலிராதென்பது கருத்து.செல்வத்தை நுகர்ந்தும் ஈந்தும் பயன்படுத்துபவள் மனைவியாதலின் ,ஆண்மைத் தன்மை அவளிடத்தும் பெண்மைத்தன்மை கணவனிடத்தும் உள்ளனவென்று ஆடவர் நாணிக் கடிந்துரைத்தபின், அவரை மீண்டும் பார்த்தற்கு அவன் நாணுதலால், 'நாணாக நாணுத் தரும்' என்றார்.

5 சாலமன் பாப்பையா

தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

7 சிவயோகி சிவக்குமார்

ஆக்கபூர்வமான செயல்களை கவனிக்காமல் பெண்ணை மட்டுமே விரும்புபவன் வெட்கப்படக்கூடிய பெரிய வேட்கக் கேட்டை அடைவான்.

8 புலியூர்க் கேசிகன்

தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.

More Kurals from பெண்வழிச்சேறல்

அதிகாரம் 91: Kurals 901 - 910

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature