Kural 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

paenaadhu petpavae seyyinum konkanaik
kaanaa thamaiyala kan.

🌐 English Translation

English Couplet

Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.

Explanation

Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

2 மணக்குடவர்

தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மைப் புறக்கணித்துத் தாம் விரும்பியவற்றையே செய்வாராயினும் ; கொண்கனைக் காணாது கண் அமையல-காதலரைக் காணாது என் கண்கள் அமைகின்றன வல்ல அத்தகைய கண்களை வைத்துக்கொண்டு நான் புலப்பதெங்ஙனம் என்பதாம் . தன்விதுப்புக்கண்மே லேற்றப்பட்டது . ஏகாரம் பிரிநிலை . எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.

5 சாலமன் பாப்பையா

என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

6 கலைஞர் மு.கருணாநிதி

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

7 சிவயோகி சிவக்குமார்

என்மீது அக்கறையின்றி தன் செயல் செய்தாலும் கொண்டவனை காணாமல் அமைதி அடைவதில்லை கண்.

8 புலியூர்க் கேசிகன்

என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே!

More Kurals from புணர்ச்சிவிதும்பல்

அதிகாரம் 129: Kurals 1281 - 1290

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature