பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.
Transliteration
palasollak kaamuRuvar mandramaa satra
silasollal thaetraa thavar.
🌐 English Translation
English Couplet
Who have not skill ten faultless words to utter plain,
Their tongues will itch with thousand words man's ears to pain.
Explanation
They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.
2 மணக்குடவர்
பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.
3 பரிமேலழகர்
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். (குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - தாம் கருதியவற்றைக் குற்ற மில்லாத சில சொற்களால் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லத் தெரியாதவர்; மன்ற - தேற்றமாக (நிச்சயமாக) ; பல சொல்லக்காமுறுவர் - வீணாகப் பல சொற்களால் விரித்துக் கூற விரும்புவர். குற்றங்களாவன: "குன்றக் கூறல் மிகைபடக் கூறல் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழுஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை." (நன். பொதுப்பாயிரம், 12). 'மன்ற' தேற்றப்பொரு ளிடைச் சொல். "மன்றஎன் கிளவி தேற்றஞ் செய்யும்." (தொல். இடை. 17)
5 திருக்குறளார் வீ. முனிசாமி
குற்றமில்லாதவையாகச் சில வார்த்தைகளில் சொல்லும் ஆற்றல் அறியாதவர்கள், பற்பல வார்த்தைகளைத் தொகுத்துச் சொல்ல ஆசைப்படுவார்கள்.
6 சாலமன் பாப்பையா
குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.
7 கலைஞர் மு.கருணாநிதி
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.
8 சிவயோகி சிவக்குமார்
அளவிற்கு அதிகமான பல சொற்களை சொல்ல ஆசைப்படுவார்கள் இடத்திற்கு தேவையான குறைவற்ற சில சொற்களில் தேர்ச்சி பெறாதவர்கள்.
More Kurals from சொல்வன்மை
அதிகாரம் 65: Kurals 641 - 650
Related Topics
Because you're reading about Eloquence