Kural 728

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pallavai katrum payamilarae nallavaiyuL
nanku selachchollaa thaar.

🌐 English Translation

English Couplet

Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.

Explanation

Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

2 மணக்குடவர்

பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார். இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.

3 பரிமேலழகர்

நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார்-தாம்கற்ற நல்ல பொருள்களை நல்லறிஞர் இருந்த அவைக்கண் தாம் கொண்ட அச்சத்தினால் அவர்க்கு விளங்குமாறு எடுத்துச் சொல்லும் ஆற்றலில்லாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே-பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே யாவர். கற்றோர் கல்வியைக் கற்றோரே அறிவராதலின், கற்றோர்முன் சொல்லாத கல்வி தமக்கேயன்றிப் பிறர்க்குப் பயன்படா தென்பதாம். உம்மை உயர்வுசிறப்பு. ஏகாரம் தேற்றம்.

5 சாலமன் பாப்பையா

நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

6 கலைஞர் மு.கருணாநிதி

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

7 சிவயோகி சிவக்குமார்

பல துறை நூல்களை கற்றும் பயன் இல்லாதவர் நல்லனவற்றை நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லாதவர்.

More Kurals from அவையஞ்சாமை

அதிகாரம் 73: Kurals 721 - 730

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature