Kural 1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

panai-neengip paindhoti soarum thunaineengith
tholkavin vaadiya thoal.

🌐 English Translation

English Couplet

When lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms.

Explanation

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

2 மணக்குடவர்

துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. (பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள்- தம் துணைவர் நீங்கியதனால் அவராற்பெற்ற செயற்கை யழகேயன்றிப் பழைய இயற்கை யழகு மிழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும்- தம் பருமை குன்றியதனாற் பசும்பொன் வளையல்கள் கழலச் செய்யும். 'சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. முதலொடு சினைக்குள்ள ஒற்றுமைபற்றித் 'துணை நீங்கி' என்றாள். அன்று அவர் பிரிந்தாரென்று அவரது அன்பின்மையை உணர்த்தின; இன்று அவர் குறித்த பருவத்து வந்திலரென்று அவரது பொய்ம்மையை உணர்த்துகின்றன. இங்ஙனம் அவர் மேற் குறைகூறுதற்கு அவரே இடந்தந்துள்ளார் என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

6 கலைஞர் மு.கருணாநிதி

பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

7 சிவயோகி சிவக்குமார்

பருமன் குறைந்து வளையல் போல் மெலிந்துவிடும் துணை நீங்கிப் பழைய நினைப்பில் வாடிய தோள்.

8 புலியூர்க் கேசிகன்

தமக்கு துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் சுழலச் செய்கின்றனவே!

More Kurals from உறுப்புநலனழிதல்

அதிகாரம் 124: Kurals 1231 - 1240

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature