Kural 1223

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

paniarumpip paidhalkol maalai thuniarumpith
thunpam valara varum.

🌐 English Translation

English Couplet

With buds of chilly dew wan evening's shade enclose;
My anguish buds space and all my sorrow grows.

Explanation

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

2 மணக்குடவர்

நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

3 பரிமேலழகர்

(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. (குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை-காதலரோடு கூடியிருந்த நாளெல்லாம் குளிர்ச்சி தோன்றிப் பசந்து வந்த மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்-இந்நாளில் எனக்கு உயிர் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிப் துன்பம் மேன்மேலும் வளருமாறு வருகின்றது. 'பனியரும்பிப் பைதல் கொள்' என்னுந் தொடர், நடுக்கங் கொண்டு துன்பப்பட என்றொரு குறிப்புப் பொருளுந் தோன்ற நின்றது.

5 சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

6 கலைஞர் மு.கருணாநிதி

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

7 சிவயோகி சிவக்குமார்

பனி போல் மெல்ல அரும்பி வேகமாய் வரும் மாலை சிறு துளி அரும்பித் துன்பம் வளர வரும்.

8 புலியூர்க் கேசிகன்

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்!

More Kurals from பொழுதுகண்டிரங்கல்

அதிகாரம் 123: Kurals 1221 - 1230

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature