Kural 996

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

paNpudaiyaarp pattuNdu ulagam adhuindrael
maNpukku maaivadhu man.

🌐 English Translation

English Couplet

The world abides; for 'worthy' men its weight sustain.
Were it not so, 'twould fall to dust again.

Explanation

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

2 மணக்குடவர்

பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது: ஆண்டுப் படுதலில்லையாயின் அது மண்ணின்கட்புக்கு மாய்ந்து போவதாம்.

3 பரிமேலழகர்

பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம். ('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர்.மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உலகம் பண்பு உடையார்ப் பட்டு உண்டு - உலக நடப்பு பண்புடையாரிடத்துப் படுதலால் இடையறாது தொடர்ந்து வருகின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது-அங்ஙனமில்லாக்கால் அது மண்ணுட் புகுந்து மறைந்து போவதாம். இது "உண்டா லம்மவிவ் வுலகம்... பிறர்க்கென முயலுநருண்மையானே." என்னும் புறப்பாட்டின் (182) கருத்தை யொத்தது. படுதல் அமைதல்.' உலகு ' ஆகுபெயர்.பண்பிலார் சார்பின்மையால் அது மண்புக்கு மாயவில்லை என்னுங் கருத்துப்பட நின்றமையின், ' மன் ' ஒழியிசையிடைச்சொல். இந்நான்கு குறளாலும் பண்புடையார் உயர்வு கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.

7 சிவயோகி சிவக்குமார்

பண்பாளர்களின் செயல்களால் பின்னியே உலகம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் மன்றாடுதலும் அர்த்தமற்று போகும்.

8 புலியூர்க் கேசிகன்

பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்.

More Kurals from பண்புடைமை

அதிகாரம் 100: Kurals 991 - 1000

Related Topics

Because you're reading about Courtesy

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature