Kural 1276

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

peridhaatrip petpak kalaththal aridhaatri
anpinmai soozhva thudaiththu.

🌐 English Translation

English Couplet

While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved.

Explanation

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

2 மணக்குடவர்

ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

3 பரிமேலழகர்

(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள் அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக் கறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினாலான துன்பத்தை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணங் கலக்கின்ற கலவி ; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்த நிலைமையை நோக்கின் , மீண்டும் அத் துன்பத்தை நீண்டகாலம் அரிதாக ஆற்றியிருந்து , அவரது அன்பின்மையையே நினைக்குந் தன்மையை யுடையதாகும். செய்யும் இன்பம் பிரிதற்குறிப்பொடு கூடியதாயிருத்தலின் , முடிவில் துன்ப மாகவே முடியும் என்பதாம் .

5 சாலமன் பாப்பையா

அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

7 சிவயோகி சிவக்குமார்

பெரிதாக செயலாற்றி இனிமையாக கலத்தல் அரிதாக நடக்கும் அன்பின்மையால் சூழ்ந்ததை துடைத்து விடுகிறது.

8 புலியூர்க் கேசிகன்

பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும்.

More Kurals from குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128: Kurals 1271 - 1280

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature