பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து.
Transliteration
peridhaatrip petpak kalaththal aridhaatri
anpinmai soozhva thudaiththu.
🌐 English Translation
English Couplet
While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved.
Explanation
The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
2 மணக்குடவர்
ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
3 பரிமேலழகர்
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள் அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக் கறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினாலான துன்பத்தை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணங் கலக்கின்ற கலவி ; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்த நிலைமையை நோக்கின் , மீண்டும் அத் துன்பத்தை நீண்டகாலம் அரிதாக ஆற்றியிருந்து , அவரது அன்பின்மையையே நினைக்குந் தன்மையை யுடையதாகும். செய்யும் இன்பம் பிரிதற்குறிப்பொடு கூடியதாயிருத்தலின் , முடிவில் துன்ப மாகவே முடியும் என்பதாம் .
5 சாலமன் பாப்பையா
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.
7 சிவயோகி சிவக்குமார்
பெரிதாக செயலாற்றி இனிமையாக கலத்தல் அரிதாக நடக்கும் அன்பின்மையால் சூழ்ந்ததை துடைத்து விடுகிறது.
8 புலியூர்க் கேசிகன்
பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும்.
More Kurals from குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 128: Kurals 1271 - 1280