Kural 1270

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

perin-ennaam petrakkaal ennaam urinennaam
ullam udaindhukkak kaal.

🌐 English Translation

English Couplet

What's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?.

Explanation

After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.

2 மணக்குடவர்

எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) உள்ளம் உடைந்து உக்கக்கால்- காதலி நம் பிரிவையாற்றாது உள்ள முடைந்து இறந்து பட்டபின்; பெறின் என் ஆம்- நம்மைத் தப்பாது பெறக்கூடிய நிலைமைய ளானால்தான் என்ன பயன்? பெற்றக்கால் என் ஆம்- அதற்குமேல், உண்மையில் நம்மைப் பெற்றாலுந்தான் என்ன பயன்? உறின் என் ஆம்- இனி, அதற்கும் மேல், நம்மொடு உடம்பொன்றிக் கலந்தாலுந்தான் என்ன பயன்? இவையொன்றாலும் ஒரு பயனுமில்லையே! அதற்குமுன் யான் விரைந்து செல்லவேண்டுமென்பது கருத்தாதலின், விதும்பலாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை யறிக. என்னும் பரிமேலழகர் மறுப்புப் பொருத்தமானதே. 'ஆம்' ஆகும் என்பதன் தொகுத்தல்.

5 சாலமன் பாப்பையா

என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

6 கலைஞர் மு.கருணாநிதி

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.

7 சிவயோகி சிவக்குமார்

பெற வேண்டியதை எல்லாம் பெறப்படுவதால் என்ன பயன் இப்பொழுது இன்றி உள்ளம் உடைந்துவிட்டது என்றால்.

8 புலியூர்க் கேசிகன்

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்து போய்விட்டால், அவரைப் பெறுவதனால் என்ன? பெற்றால் தான் என்ன? அவரோடு பொருந்தினால் தான் என்ன?

More Kurals from அவர்வயின்விதும்பல்

அதிகாரம் 127: Kurals 1261 - 1270

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature