பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்.
Transliteration
perin-ennaam petrakkaal ennaam urinennaam
ullam udaindhukkak kaal.
🌐 English Translation
English Couplet
What's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?.
Explanation
After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.
2 மணக்குடவர்
எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) உள்ளம் உடைந்து உக்கக்கால்- காதலி நம் பிரிவையாற்றாது உள்ள முடைந்து இறந்து பட்டபின்; பெறின் என் ஆம்- நம்மைத் தப்பாது பெறக்கூடிய நிலைமைய ளானால்தான் என்ன பயன்? பெற்றக்கால் என் ஆம்- அதற்குமேல், உண்மையில் நம்மைப் பெற்றாலுந்தான் என்ன பயன்? உறின் என் ஆம்- இனி, அதற்கும் மேல், நம்மொடு உடம்பொன்றிக் கலந்தாலுந்தான் என்ன பயன்? இவையொன்றாலும் ஒரு பயனுமில்லையே! அதற்குமுன் யான் விரைந்து செல்லவேண்டுமென்பது கருத்தாதலின், விதும்பலாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை யறிக. என்னும் பரிமேலழகர் மறுப்புப் பொருத்தமானதே. 'ஆம்' ஆகும் என்பதன் தொகுத்தல்.
5 சாலமன் பாப்பையா
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.
7 சிவயோகி சிவக்குமார்
பெற வேண்டியதை எல்லாம் பெறப்படுவதால் என்ன பயன் இப்பொழுது இன்றி உள்ளம் உடைந்துவிட்டது என்றால்.
8 புலியூர்க் கேசிகன்
பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்து போய்விட்டால், அவரைப் பெறுவதனால் என்ன? பெற்றால் தான் என்ன? அவரோடு பொருந்தினால் தான் என்ன?
More Kurals from அவர்வயின்விதும்பல்
அதிகாரம் 127: Kurals 1261 - 1270