பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்.
Transliteration
periyaaraip paeNaadhu ozhukiR periyaaraal
paeraa idumpai tharum.
🌐 English Translation
English Couplet
If men will lead their lives reckless of great men's will,
Such life, through great men's powers, will bring perpetual ill.
Explanation
To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
2 மணக்குடவர்
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.
3 பரிமேலழகர்
பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம், அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பெரியாரைப் பேணாது ஒழுகின் - அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் போற்றாது ஒழுகுவராயின்; பெரியோரால் பேரா இடும்பை தரும் - அது அப்பெரியாரால் அவர்க்கு எப்போரும் நீங்காத துன்பங்களை உண்டாக்கும். துன்பங்கள் இருமையிலும் தம்மாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் இடையறாது நேர்வன.அவை தாமே தேடிக்கொண்டவை யென்பது தோன்ற , ஒழுக்கத்தை வினைமுதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். இதனாற் பெரியாரைப் பிழைத்தலின் தீமை பொதுவகையாற் கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
7 சிவயோகி சிவக்குமார்
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால் அந்த பெரியவர்களாலும் மாற்றமுடிய துன்பம் வரும்.
8 புலியூர்க் கேசிகன்
பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்துவிடும்.
More Kurals from பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 90: Kurals 891 - 900
Related Topics
Because you're reading about Not Offending the Great