Kural 732

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

perumporuLaal pettakka thaaki arungaettaal
aatra viLaivadhu naadu.

🌐 English Translation

English Couplet

That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.

Explanation

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

2 மணக்குடவர்

பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.

3 பரிமேலழகர்

பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள'¢என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.) .

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பெரும்பொருளால் பெள்தக்கது ஆகி - பல்வகைப் பொருள் வளமிகுதியாற் பிற நாட்டாராலும் விரும்பப்படுவதாய்; அருங்கேட்டால் - கேடில்லாமையோடுகூடி; ஆற்ற விளைவது நாடு - நானிலச்செல்வமும் மிகுதியாக விளைவதே வறுமை யில்லாத நாடாவது. பெருமை பொருளின் அளவையும் வகைகளையும் தழுவிநின்றது. கேடாவன மிகுமழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, பகையரசுண்மை என ஆறென்றும்; வெட்டில், கிளி, யானை, காட்டுப்பன்றி, தொட்டியர். கள்வர், பெரும்புயல் என ஏழென்றும்; விட்டில், கிளி, யானை, தன்னரசு (Autocracy), வேற்றரசு, மழையின்மை, கடுமழை, கடுங்காற்று என எட்டென்றும்; மூவகையிற் சொல்லப்படும். "மிக்கபெய லோடுபெய லின்மையெலி விட்டில்கிளி யக்கணர சண்மையோ டாறு" வெட்டில் கிளியே நாவா யேனம் தொட்டியர் கள்வர் சோனைப் பெரும்புயல் நட்டம் நாட்டேழ் குற்ற மாகும்." (பிங்.3:7) "விட்டில் கிளிநால்வாய் தன்னரசு வேற்றரசு நட்டம் கடும்புனல்கா லெட்டு" கேடருமை யென்பது ' அருங்கேடு' எனச் செய்யுளில் முறைமாறி நின்றது. கேடுகளுள் இயற்கையாய் வருவன செங்கோலாலும் இறைவழிபாட்டாலும், யானையால் வருவது வேட்டையாலும், அரசரால் வருவது குடிகளின் எதிர்ப்பாலும் போராலும், நீக்கப்படும். நானிலச் செல்வமான, நாடுபடு செல்வமும் காடுபடு செல்வமும் மலைபடு செல்வமும் அலை (கடல்) படுசெல்வமுமாம்.

5 சாலமன் பாப்பையா

மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

6 கலைஞர் மு.கருணாநிதி

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

நிறைந்த பொருள்களை பெற வாய்பளித்து, அருமையான உழைப்பால் தேவைகளை பூர்த்தி செய்வது நாடு.

More Kurals from நாடு

அதிகாரம் 74: Kurals 731 - 740

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature