பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது.
Transliteration
poruLketuththup poimaeR koLeei aruLketuththu
allal uzhappikkum soodhu.
🌐 English Translation
English Couplet
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey.
Explanation
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
2 மணக்குடவர்
சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.
3 பரிமேலழகர்
சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சூது-சூதாட்டு; பொருள் கெடுத்து- தன்னைப் பயில்கின்றவன் தோல்வியால் அவன் செல்வத்தைக் கெடுத்து, பொய் மேற்கொளீஇ- வெற்றி பெரும் பொருட்டுப் பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து- தோல்வி வருத்தத்தாலும் வென்றவன்மீது கொள்ளும் பொறாமையாலும் எழும் சினத்தால் அருள் நோக்கைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும்- இங்ஙனம் இருமையிலும் துன்புற்று வருந்தச் செய்யும். மூவகைத் தீங்குகளுள், முன்னதன் விளைவு இம்மையிலும் பின்னவற்றின் விளைவு மறுமையிலும் நிகழ்வனவாம். "பொருள் கொடுத்து என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு மேற்கொளீஇ என்புழி மேற்கோடலாகிய வினைமுதல்வினை" என்னும் பரிமேலழகர் உரை பொருந்துவதே. 'கொளீஇ' இன்னிசையளபெடை.
5 சாலமன் பாப்பையா
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
7 சிவயோகி சிவக்குமார்
பொருளாதார நிலையை சீரழித்து, பொய்யான வாழ்வை மேற்கொள்ளச் செய்து, அருள் அற்றவராக மாற்றி துன்பத்தில் திண்டாடச் செய்யும் சூது.
8 புலியூர்க் கேசிகன்
பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது, ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.
More Kurals from சூது
அதிகாரம் 94: Kurals 931 - 940
Related Topics
Because you're reading about Gambling