Kural 1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pulli vidaaap pulaviyul thondrumen
ullam udaikkum padai.

🌐 English Translation

English Couplet

'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.

Explanation

In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

2 மணக்குடவர்

என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும். அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.

3 பரிமேலழகர்

(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(அப்புலவி இனி எதனால் நீங்குமென்ற தோழிக்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் - காதலரைத் தழுவிக் கொண்டு பின் விடாமைக் கேதுவாகிய அப்புலவிக் கண்ணே; என் உள்ளம் உடைக்கும் படை - அதை மேற்கொண்ட என் உள்ளத்தைத் தகர்க்கும் படைக்கலம்; தோன்றும் - உண்டாகும். புலவி யென்றது அவ்வினை நிகழ்ச்சியை, படைக்கலம் என்றது காதலரின் பணிமொழியை, புலவி நீங்குந் திறங் கூறியவாறு. விடா அ, இசைநிறை யளபெடை.

5 சாலமன் பாப்பையா

என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.

7 சிவயோகி சிவக்குமார்

இணைவதால் இணைவதையே விருப்புச் செய்கிறது உள்ளம், இணைவதே என் உள்ளத்தை உடைக்கும் படையாக இருக்கிறது.

8 புலியூர்க் கேசிகன்

காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது.

More Kurals from ஊடலுவகை

அதிகாரம் 133: Kurals 1321 - 1330

Related Topics

Because you're reading about Joy of Reconciliation

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature