Kural 660

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

salaththaal poruLseydhae maarththal pasumaN
kalaththuLnheer peydhiree-i yatru.

🌐 English Translation

English Couplet

In pot of clay unburnt he water pours and would retain,
Who seeks by wrong the realm in wealth and safety to maintain.

Explanation

(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

2 மணக்குடவர்

வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்து வைத்த தன்மைத்து. இது தானும் பொருளுங் கூடிக் கெடு மென்றது.

3 பரிமேலழகர்

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று - பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும். (முன் ஆக்கம் பயப்பன போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று, ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு, இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமார்த்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார், அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சலத்தான் பொருள் செய்து ஏமார்த்தல்-அமைச்சன் வஞ்சனையாற் பொருளீட்டி அதனால் அரசனுக்குப் பாதுகாப்புச் செய்தல்; பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - ஈரம் புலராத பச்சைமட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்ததனோ டொக்கும். நீரோடு பசுமட்கலங் கெடுவது போல் வஞ்சனைப் பொருளோடு அரசன் கெடுவான் என்பதாம். ஆக்கஞ் செய்வது போல் முன் தோன்றிப் பின்பு அழிவைச் செய்வதால். 'சலத்தால்' என்றார். 'சலம்' வடசொல். ஏமாத்தல் என்பது ஏமாத்தல் என ரகரங்கெட்டு நின்றது. ஏமம்-பாதுகாப்பு. ஆர்தல்-பொருந்துதல், ஆர்த்தல்-பொருத்துதல். 'இரீஇ' இருத்தி யென்று பொருள் படும் சொல்லிசையளபெடை. இருத்துதல் நீண்டகாலம் இருக்கச் செய்தல்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தீய தொழில்களால் பொருள் சேர்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்தல் என்பது, பச்சை மண் பாத்திரத்திற்குள்ளே நீரைப் பெய்து அதனைப் பாதுகாப்பது போலாகும்.

6 சாலமன் பாப்பையா

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

8 சிவயோகி சிவக்குமார்

சூழ்ச்சியால் பொருள் ஈட்டி வைத்தால், சுடாத மண்பாத்திரத்தில் நிர் நிரப்ப கரைவது போல் உரிய பலன் அற்றுப்போகும்.

More Kurals from வினைத்தூய்மை

அதிகாரம் 66: Kurals 651 - 660

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature