செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்.
Transliteration
sellitaththuk kaappaan sinangaappaan allitaththuk
kaakkin-en kaavaakkaa laen.
🌐 English Translation
English Couplet
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?.
Explanation
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.
2 மணக்குடவர்
தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.
3 பரிமேலழகர்
[அஃதாவது, சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன் மாட்டு உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மைபற்றி நிகழ்வதாய வெகுளியை விலக்கலின், வாய்மையின் பின் வைக்கப்பட்டது.) சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சினம் செல்லிடத்துக் காப்பான் காப்பான் - சினம் தாக்கக் கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - அல்லாத வலிய இடத்தில் அது தானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தாலென், தடுக்காவிட்டாலென்? இரண்டும் ஒன்றுதானே! 'செல்லிடம்' தவத்தில் தாழ்ந்தவரும் வறியவரும் அதிகாரமில்லாதவருமாம். 'அல்லிடம்' தவத்தில் உயர்ந்தவரும் செல்வரும் அதிகாரத்திற் சிறந்தவருமாம். வலிய இடத்திற் சினங்கொள்வதால் தனக்கே கேடாதலாலும், அதையடக்குவது அறமன்மையானும், 'காக்கினென் காவாக்காலென்' என்றார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
சினம் பலிக்குமிடத்தில் அதனை வராமல் காப்பவனே அருளால் காப்பவனாவான். அது பலிக்காத இடத்தில் அதனைத் தடுத்தால் என்ன? தடுக்காமல் இருந்தால்தான் என்ன?.
6 சாலமன் பாப்பையா
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.
7 கலைஞர் மு.கருணாநிதி
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.
8 சிவயோகி சிவக்குமார்
செல்லத்தகுந்த இடத்தில் காப்பவரே சினத்தை காப்பவர் செல்லத்தகாத இடத்தில் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என்ன?
More Kurals from வெகுளாமை
அதிகாரம் 31: Kurals 301 - 310
Related Topics
Because you're reading about Anger Management