Kural 1275

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

seridhodi seydhirandha kallam urudhuyar
theerkkum marundhondru udaiththu.

🌐 English Translation

English Couplet

The secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked.

Explanation

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

2 மணக்குடவர்

செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) செறிதொடி செய்து இறந்த கள்ளம்-நெருங்கிய வளையல்களை யணிந்த என் காதலி , என்னிடத்தில்லாத தொன்றைக் கருதிக் கொண்டு அது கரணியமாக எனக்குமறைத்து வைத்த குறிப்பு ; உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து- என் பெருந்துயரைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை உடையதாயிருக்கின்றது. இல்லாததொன்று பிரிவு . ' கள்ளம் ' ஆகுபெயர் . மறைத்து வைத்தது உடன்போக் குட்கொண்டது . ' உறுதுயர் ' பெருமகிழ் வுறுத்தற்குச் செய்த பாராட்டு வினைகளை பிரிவுக்குறிப்பாகக் கொண்டு அஞ்சியதால் உண்டான மன வருத்தம் . 'உறு' உரிச்சொல் மருந்தாவது பிரிவின்மை தோழியால் தெரிவித்தல் . அதை உடனே செய்தல் வேண்டு மென்பதாம் . ' செறி தொடி ' அன்மொழித் தொகை .

5 சாலமன் பாப்பையா

நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.

6 கலைஞர் மு.கருணாநிதி

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

7 சிவயோகி சிவக்குமார்

செழுமையான வளையல்கள் அணிந்தவள் செய்த திறமையான கள்ளத்தனம் நான் உற்ற துன்பத்தை தீர்க்கும் மருத்தை வைத்திருக்கிறது.

8 புலியூர்க் கேசிகன்

செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது.

More Kurals from குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128: Kurals 1271 - 1280

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature