Kural 569

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

seruvandha poazhdhir siRaiseyyaa vaendhan
veruvandhu veydhu kedum.

🌐 English Translation

English Couplet

Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.

Explanation

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

2 மணக்குடவர்

தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும். இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.

3 பரிமேலழகர்

சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும். (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சிறை செய்யா வேந்தன் -போர் வருவதற்கு முன்பே தனக்குப் புகலாக ஓர் அரண் செய்து கொள்ளாத அரசன் ; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் -போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பின்மையால் அஞ்சி விரைந்து கெடுவான். படைமறவர் அஞ்சித் தன்னை விட்டு நீங்குதலாற் பகைவராற் பிடிக்கப்பட்டு, நாடோ செல்வமோ , உயிரோ அம் மூன்றுமோ இழக்க நேருமாதலின் , 'வெருவந்து வெய்து கெடும்' என்றார். 'வெய்து' என்பது கடுந்துன்புற்று என்றுமாம்.இதனால் அரசன் தானே அஞ்சும் வினையும் அதன் தீங்கும் கூறப்பட்டன.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

பகைவர் வருவதற்கு முன்பாகவே தனக்குப் புகலிடமானதோர் அரண் செய்து கொள்ளாத அரசன் போர்வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாததால் விரைவில் கெடுவான்.

6 சாலமன் பாப்பையா

நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

8 சிவயோகி சிவக்குமார்

போர் மூண்ட காலத்தில் அடக்கி ஆள ஆடசியாளர் வெருப்படைந்து சீர் கெடுவர்.

More Kurals from வெருவந்தசெய்யாமை

அதிகாரம் 57: Kurals 561 - 570

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature