செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று.
Transliteration
setraarpin sellaap perundhakaimai kaamanoai
utraar aRivadhondru andru.
🌐 English Translation
English Couplet
The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know.
Explanation
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.
2 மணக்குடவர்
தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றால் அறிவதொன்று அன்று. இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று. (இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(நம்மை மறந்தாரை நாமும் மறத்தற்குரியோம் என்ற தோழிக்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை- தம்மைத் துன்புறுத்திப் பிரிந்துசென்றார் பின் செல்லாது தாமும் நீங்கி நிற்கும் நிறையுடைமை; காம நோய் உற்றார் அறிவது ஒன்று அன்று-காமநோய்ப் படாதவர் அறிவதொன்றே யன்றி அந்நோய்ப்பட்டவர் அறிவ தொன்றன்று . காம நோய்ப்பட்டவர் மானமுடை யவரல்லர் . ஆதலால் ' செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை ' அவர்க்கில்லை யென்பதாம் . இன்பக் காலத்தைத் துன்பக்காலமாக மாற்றியதால் ' செற்றார் ' என்றாள் . பின் செல்லுதல் இடைவிடாது நினைத்தல் . ' பெருந்தகைமை ' இங்கு ஆகுபொருளி .
5 சாலமன் பாப்பையா
தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.
6 கலைஞர் மு.கருணாநிதி
தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.
7 சிவயோகி சிவக்குமார்
விரும்பாது சென்றவர் பின் செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை காமநோய் அடைந்தவர் அறியக்கூடிய ஒன்று இல்லை.
8 புலியூர்க் கேசிகன்
தம்மை வெறுத்தவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று.
More Kurals from நிறையழிதல்
அதிகாரம் 126: Kurals 1251 - 1260