சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
Transliteration
siRainhalanum seerum ilareninum maandhar
uRainhilaththoadu ottal aridhu.
🌐 English Translation
English Couplet
Though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!.
Explanation
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
2 மணக்குடவர்
அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது. இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.
3 பரிமேலழகர்
சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது. ('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சிறைநலனும் சீரும் இலர் எனினும் - அழித்தற் கரிய அரண்சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளுமாகிய பிற பெருமையும் இல்லாதவராயினும் ; மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது - போர் வினைக்குச் சிறந்த மாந்தரை அவர் நிலையாக வதியும் இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிதாம் . ஒட்டல் பொருந்துதல் ; இங்குப் பொருந்திப் பொருதல் . ஆதலால் , பரிமேலழகர் குறித்தவாறு வேற்றுமை மயக்கம் அன்றாம் . அரிமாவும் வரிமாவும்போற் பொரும் ஆண்மை யுடையாரை தொகைச் சிறுமை நோக்கி யிகழ்ந்து அவரிருப்பிடஞ் சென்று தாக்கின் , அவர் மறமிகுதியானும் வேறிடமின்மையானும் உயிரைப் பொருட்படுத்தாது ஊன்றிப்பொருவர் . அதனாற் பெரும்படையும் அவர்க்கு உடையும் என்பதாம் . "ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும்" என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
5 சாலமன் பாப்பையா
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
7 சிவயோகி சிவக்குமார்
சீரும் சிறந்த பாதுகாப்பும் இல்லையென்றாலும் மனிதனைத் தான் வாழும் இடத்திற்குச் சென்று தாக்குவதுக் கடினம்.
More Kurals from இடனறிதல்
அதிகாரம் 50: Kurals 491 - 500