சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
Transliteration
solalvallan soarvilan anjaan avanai
ikalvellal yaarkkum aridhu.
🌐 English Translation
English Couplet
Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach.
Explanation
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
2 மணக்குடவர்
ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
3 பரிமேலழகர்
சொலல் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது. (ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல், சோர்வு - சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல்.இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சொலல் வல்லன் - தான் சொல்லக் கருதியவற்றைப் பிறர்க்கேற்பச் சொல்லுதல் வல்லவனாய்; சோர்வு இலன் - அவை மிகப்பலவாயினும் எதையும் மறந்து விட்டு விடாதவனாய்; அஞ்சான் அவனை - அவைக்கு அஞ்சாதவனாயிருப்பவனை; இகல் வெல்லல் அரிது - தருக்கத்திலும் மாறுபாட்டிலும் வெல்லுதல் எவருக்கும் அரியதாம். ஏற்பச்சொல்லுதலாவது, கேட்பார்க்கு நன்மையல்லாவிடினும் மறுக்காது ஒத்துக்கொள்ளுமாறு சொல்லுதல். சோர்வுபடச் சொல்லுவதில் முறைபிறழச் சொல்லுதலும் தனக்குக் கேடாகச் சொல்லுதலும் அடங்கும். மாறுபாட்டில் வெல்லுதல், பிரித்தல் பொருத்தல் முதலிய வலக்காரங்களால் (தந்திரங்களால்) மேற்கொள்ளுதல். தருக்கம் சொல்லும், மாறுபாடு செயலும் ஆகும்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தான் எண்ணியவற்றைப் பிறர்க்குச் சொல்லுவதில் வல்லவனாகி, சொல்லுவதில் சோர்வில்லாதவனாகி, அவைக்கு அஞ்சாதவன் எவனோ அவனை மாறுபாட்டினால் வெல்லுதல் யாவர்க்கும் அரிதாகும்.
6 சாலமன் பாப்பையா
தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.
7 கலைஞர் மு.கருணாநிதி
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.
8 சிவயோகி சிவக்குமார்
சொல்வதில் வல்லவனை, சோர்வில்லாதவனை, எதற்கும் அஞ்சாதவனை, இழிவு செய்து வெல்வது எந்த ஒருவருக்கும் அரிதானதே.
More Kurals from சொல்வன்மை
அதிகாரம் 65: Kurals 641 - 650
Related Topics
Because you're reading about Eloquence