Kural 561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thakkaangu naatith thalaichchellaa vaNNaththaal
oththaangu oRuppadhu vaendhu.

🌐 English Translation

English Couplet

Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.

Explanation

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

2 மணக்குடவர்

குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.

3 பரிமேலழகர்

'தக்காங்கு' நாடி - ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் 'ஒத்தாங்கு' ஒறுப்பது வேந்து - பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான். (தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தக்காங்கு நாடி-ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நடுநின்றாராய்ந்து; தலைச்செல்லா வண்ணத்தால்- அவன் மேலும் அதைச் செய்யாதிருத்தற்கேற்ப அவனைத் தண்டிப்பவனே வேந்து- நல்லரசனாவன். தக்காங்கு நாடுதலாவது, குற்றஞ்சாட்டியும் குற்றஞ்சாடியும் ஆகிய இருவர் சொல்லையும் எழுதரங்கேட்டு, சான்றியங்களையும் சான்றுகளையும் காய்த லுவத்தலின்றி நடுநிலையாய் ஆராய்ந்து குற்றவாளி யாரென்று காணுதல். ஒத்தாங்கொறுத்தாலாவது கண்ணோட்டமுங் கண்ணறவுமின்றிக் குற்றத்திற்குத் தக்கதண்டனை செய்தல். தக்காங்கு நாடாமையுங் கடுந்தண்டமும் வெருவந்த செய்தலாம். தக்க ஆங்கு தக்காங்கு(தக்கவாறு). ஒத்த ஆங்கு ஒத்தாங்கு(ஒத்தவாறு).

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தக்க முறையில் நடுவாக நின்று ஆராய்ந்து குற்றம் செய்தவன் பின்னும் அதனைச் செய்யாமல் இருக்கும் பொருட்டு அக்குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பவனே வேந்தனாவான்.

6 சாலமன் பாப்பையா

தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

7 கலைஞர் மு.கருணாநிதி

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

தகுந்த ஆதாரத்தை ஆராய்ந்து மீண்டும் அந்தச் செயலில்( குற்றச்) தலைப்படாது இருக்க ஏற்றபடி தண்டிப்பது அரசின் செயல்.

More Kurals from வெருவந்தசெய்யாமை

அதிகாரம் 57: Kurals 561 - 570

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature