Kural 1107

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thammil irundhu thamadhupaaththu uNtatraal
ammaa arivai muyakku.

🌐 English Translation

English Couplet

As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.

Explanation

The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

2 மணக்குடவர்

தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.

3 பரிமேலழகர்

(இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

[நீ இவளை வரைந்து கொண்டு தம்மில்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தில் ஈடுபடல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது .] அம்மா அரிவை முயக்கு - அழகிய மாநிறத்தையுடைய இப்பெண்ணின் தழுவல் ; தம் இல் இருந்து தமது பாத்து உண்ட அற்று - தமக்குரிய தனி மனையிற் குடியிருந்து , தம் முயற்சியாற் பெற்ற பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கலரசுகட்குப் பகுத்து , எஞ்சியதைத் தாம் உண்டாற்போல்வதே. இல்லறஞ்செய்தார் பெறும் விண்ணின்பம் போன்ற இன்பத்தை இக்களவொழுக்கத்தாலேயே பெறுகின்றே னென்று , தலைமகன் வரைவுடன்படாது கூறியவாறு. வரைவாவது இல்லறம் தொடங்கும் கற்புச் சடங்கு. "எலிவளையுந் தனிவளை, தனிவளையுந் தன்வளை. என்னும் உரிமையுணர்ச்சி பற்றித் ' தம் இல் ' என்றும் , தாள்தந்த துண்ணலி னூங்கினிய தில்" ( குறள் 1065 ) என்பது பற்றித் தமது என்றும் , 'ஐம்புலத்தா ரோம்பல்' (குறள் 43) பற்றி 'பாத்து' என்றும் வரைவாற் சிறந்த பேறில்லை யென்பது தோன்ற ' அற்று ' என்றும் , கூறினான் . ' ஆல் ' அசைநிலை . ' அரிவை ' என்பது இங்குப் பருவங் குறியாது பெண்மை மாட்டுங் குறித்து நின்றது.

5 சாலமன் பாப்பையா

அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

6 கலைஞர் மு.கருணாநிதி

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

7 சிவயோகி சிவக்குமார்

தன்னுடன் இருந்து தன் உழைப்பால் உண்டானதை பகிர்ந்து உண்ணும் மாபெரும் மகிழ்ச்சி பருவ பெண்ணின் முயக்கத்தில் இருக்கிறது.

8 புலியூர்க் கேசிகன்

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்!

More Kurals from புணர்ச்சிமகிழ்தல்

அதிகாரம் 111: Kurals 1101 - 1110

Related Topics

Because you're reading about Joy of Union

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature