தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
Transliteration
thaRkaaththuth thaRkoNtaaR paeNith thakaisaandra
soRkaaththuch soarvilaaL peN.
🌐 English Translation
English Couplet
Who guards herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.
Explanation
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
2 மணக்குடவர்
தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.
3 பரிமேலழகர்
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
தற்காத்து-தன் கற்பையும் உடல்நலத்தையுங் காத்து; தற்கொண்டாற் பேணி - தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி; தகைசான்ற சொல்காத்துதம் - இருவரையும் பற்றிய தகுதிவாய்ந்த உலக மதிப்பையுங் காத்து; சோர்விலாள் - பிறர்க்குச் செய்யும் அறவினைகளிலும் தளர்ச்சியில்லாதவள்; பெண் - இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தன்னையும் காத்துக் கொண்டு தன்னைக் கொண்ட கணவனையும் பேணிப் பிறர் கூறும் நற்புகழுரைகளையும் போற்றிக் காத்துச் சோர்வு (இவைகளில் மறதி) இல்லாதவளே மனைவியாவாள்.
6 சாலமன் பாப்பையா
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
7 கலைஞர் மு.கருணாநிதி
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
8 சிவயோகி சிவக்குமார்
தன்னை காத்து தான் கொண்டவர்களை பாதுகாத்து தகுதிக்கு உதாரனமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருபவளே பெண்.
9 புலியூர்க் கேசிகன்
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.
More Kurals from வாழ்க்கைத் துணைநலம்
அதிகாரம் 6: Kurals 51 - 60
Related Topics
Because you're reading about Marriage & Partnership