தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
Transliteration
theevinaiyaar anjaar vizhumiyaar anjuvar
theevinai ennum serukku.
🌐 English Translation
English Couplet
With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.
Explanation
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
2 மணக்குடவர்
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
3 பரிமேலழகர்
[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.) தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு; தீவினையார் அஞ்சார். தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர். தீவினைக்குக் கரணியமான இறுமாப்பு தீவினை யென்னும் கருமியமாகச் சார்த்திக் கூறப்பட்டது. அஞ்சாமை மனச்சான்றின் மழுக்கத்தாலும் அச்சம் அதன் கூர்மையாலும் ஏற்படுவனவாம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தீய செயல் என்னும் செருக்குடைய அறியாமைக்கு தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங்கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடையவர்கள் அஞ்சப் படுவார்கள்.
6 சாலமன் பாப்பையா
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
7 கலைஞர் மு.கருணாநிதி
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
8 சிவயோகி சிவக்குமார்
கேடுசெய்பவர் அஞ்சுவது இல்லை வாழ்வை நேசிப்பவர் அஞ்சுவார்கள் தீய வினை என்ற அகங்காரத்திற்கு.
More Kurals from தீவினையச்சம்
அதிகாரம் 21: Kurals 201 - 210
Related Topics
Because you're reading about Fear of Sin