Kural 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thinaiththuNai nandri seyinum panaiththuNaiyaak
koLvar Payan-theri vaar.

🌐 English Translation

English Couplet

Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.

Explanation

Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

2 மணக்குடவர்

தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி.

3 பரிமேலழகர்

தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

தினைத்துணை நன்றி செயினும்- தினையளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானாயினும்; பயன் தெரிவார் பனைத் துணையாக் கொள்வர்- அதன் பயனளவை யறிந்தவர் அதைப் பனையளவினதாகிய பேருதவியாகக் கருதுவர். 'தினை' 'பனை' என்னும் நிலைத்திணைப் பெயர்கள் இங்குச் சிறுமை பெருமை குறிக்கும் அளவைப் பெயர்களாக வந்தன, 'உம்மை' இழிவு சிறப்பு. ஒருவர் செய்த வுதவியைப் பொருளளவிலும் முயற்சியளவிலும் நோக்காது பயனளவில் நோக்க வேண்டு மென்பது, இங்குக் கூறப்பட்டது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தினையளவினதாகிய நன்மையினைச் செய்தாலும் அதனைப் பனையளவினதாகக் கொள்ளுவார்கள். யாரென்றால், அக்கருத்தின் பயனையறிந்தவர்கள் என்பதாம்.

6 சாலமன் பாப்பையா

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

8 சிவயோகி சிவக்குமார்

தினையளவு துணையாக நன்றி செய்தலும் பனையளவு துணையாக ஏற்பார்கள் நன்றியின் பயன் தெரிந்தவர்கள்.

9 புலியூர்க் கேசிகன்

உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.

More Kurals from செய்ந்நன்றி அறிதல்

அதிகாரம் 11: Kurals 101 - 110

Related Topics

Because you're reading about Gratitude

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature