திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.
Transliteration
thiRanaRindhu solluka sollai aRanum
poruLum adhaninooungu il.
🌐 English Translation
English Couplet
Speak words adapted well to various hearers' state;
No higher virtue lives, no gain more surely great.
Explanation
Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
2 மணக்குடவர்
சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.
3 பரிமேலழகர்
சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சொல்லைத்திறன் அறிந்து சொல்லுக - சொல்ல வேண்டியதைச் சொல்லும் பொழுது தம் நிலைமையும் கேட்போர் நிலைமையும் செய்தியின் நிலைமையும் அறிந்து அவற்றிற் கேற்பச் சொல்லுக; அதனின்ஊஉங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனஞ் சொல்வதினுஞ் சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை. அறியவேண்டிய திறங்களாவன: குடிப்பிறப்பு , இயல்பு, கல்வி , அறிவு, ஒழுக்கம், செல்வம் , அகவை (வயது) , மனப்பான்மை முதலியவற்றால் ஏற்படுந் தகுதி வேறு பாடுகள். அவற்றை யறிந்து சொல்லுதலாவது , அவற்றால் தமக்கும் கேட்போர்க்குமுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் வேற்றுமைகளையும் அறிந்து அவற்றிற்குரிய மரபுப்படி சொல்லுதல். அது உலகத்தோடொட்ட வொழுகலையும் கேட்போர்க் கினிமையையும் பயத்தலால் அறவினையாயிற்று; கேட்போர்க்கு விளங்கி வினை முடிவதாற் பொருள்வினையாயிற்று . அறனும் பொருளுமாகிய விளைவுகள் அவற்றை விளைக்கும் வினையின் மேல் நின்றன, 'அதனினூஉங்கு' இன்னிசை யளபெடை.
5 சாலமன் பாப்பையா
எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.
7 சிவயோகி சிவக்குமார்
கேட்பவரின் திறனை அறிந்து வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அத்தகைய சொற்களைப் போல் அறமும் பொருளும் வேறு இல்லை.
More Kurals from சொல்வன்மை
அதிகாரம் 65: Kurals 641 - 650
Related Topics
Because you're reading about Eloquence