தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.
Transliteration
thoonguka thoongich seyaRpaala thoongaRka
thoongaadhu seyyum vinai.
🌐 English Translation
English Couplet
Slumber when sleepy work's in hand: beware
Thou slumber not when action calls for sleepless care!.
Explanation
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
2 மணக்குடவர்
தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க: தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க.
3 பரிமேலழகர்
தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக. (இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார்(குறள் 383), ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தூங்கிச் செயல் பால தூங்குக-மெள்ளச் செய்ய வேண்டிய வினைகளை மெள்ளச் செய்க; தூங்காது செய்யும் வினைதூங்கற்க-விரைந்து செய்ய வேண்டிய வினைகளை விரைந்து செய்க. மெள்ளச் செய்தல் காலந்தாழ்த்துச் செய்தலும் காலம் நீடச் செய்தலும் என இருவகை. இவற்றுள் முன்னது வினை தொடங்கலையும் பின்னது வினைசெயல் முழுவதையும் பற்றியனவாம். மெள்ளச் செய்ய வேண்டியதை விரைந்தும் விரைந்து செய்ய வேண்டியதை மெள்ளவும் செய்யின், அவற்றால் தீமையே விளையும் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
நீட்டித்துச் செய்யும் பகுதியான தொழில்களை நீட்டித்துச் செய்தல் வேண்டும். நீட்டியாது செய்ய வேண்டிய தொழில்களை நீட்டியாமல் செய்தல் வேண்டும்.
6 சாலமன் பாப்பையா
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.
7 கலைஞர் மு.கருணாநிதி
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.
8 சிவயோகி சிவக்குமார்
இயல்பாய் விடு இயல்பாகவே பல செயல்கள் நடக்கும். இயல்பாக விடாதே துணையாக இருக்கவேண்டிய செயல்களை.
More Kurals from வினைசெயல்வகை
அதிகாரம் 68: Kurals 671 - 680