Kural 1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thotinoakki mendhoalum noakki atinoakki
aqdhaan davalsey thadhu.

🌐 English Translation

English Couplet

She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

Explanation

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

2 மணக்குடவர்

தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.

3 பரிமேலழகர்

(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்து.) ( யானது தெளிவித்த வழித் தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிந்து செல்ல நான் இங்கிருப்பின் இவை நில்லா வென்னுங் குறிப்பில்தன் தோட்கடகங்களை நோக்கி ; மெல் தோளும் நோக்கி - அதற் கேதுவாக இவை மெலியு மென்னுங் குறிப்பில் தன் மெல்லிய தோள்களையும் நோக்கி ; அடி நோக்கி - அதன் பின் , இவ்விரண்டும் நிகழாமல் நீங்கள் காதலருடன் நடந்து சென்று காத்தல் வேண்டு மென்னுங் குறிப்பில் தன் பாதங்களையும் நோக்கி ; அஃது ஆண்டு அவள் செய்தது-இங்ஙனம் உடன்போக்குக் குறித்த அச்செயலையே அன்று அவள் செய்தாள் . பிரிவுக் குறிப் புண்டாயின் செலவழுங்குவித்தல் இதன் பயனாம் .

5 சாலமன் பாப்பையா

நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

7 சிவயோகி சிவக்குமார்

வளையல்களை பார்த்து தனது மெல்லிய தோளையும் பார்த்து கிழ் நோக்கி பாதங்களையும் பார்த்து என்னை ஆள்பவள் குறிப்பு செய்து உணர்த்தினாள்.

8 புலியூர்க் கேசிகன்

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும்.

More Kurals from குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128: Kurals 1271 - 1280

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature