Kural 1159

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thotirsutin alladhu kaamanhoai poala
vitirsudal aatrumoa thee.

🌐 English Translation

English Couplet

Fire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove.

Explanation

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

2 மணக்குடவர்

தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.

3 பரிமேலழகர்

(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(காமம் தீபோன்று தான் நின்ற விடத்தைச் சுடுமாதலால் நீ ஆற்றல் வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.) தீத் தொடிற் சுடின் அல்லது - தீத் தன்னைத் தொட்டாற் சுடுமே யல்லது; காம நோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமநோய் போலத் தன்னை விட்டு நீங்கினுஞ் சுடவல்லதோ? இல்லையே! பரிமேலழகர் தீத் தொடிற் சுடிற் சுடலல்லது எனச் சுடல் என்பதை முன்னுங் கூட்டி , தீத் தன்னைத் தொட்டாற் சுடுமாயிற் சுடுதலல்லது என்று உரையும் , சுடுமாயி னென்பது மந்திர மருந்துகளாற் றம்பிக்கப்படாதாயி னென்றவாறு. காமத்திற் கதுவு மில்லை யென்பாள் வாளா 'சுடல்' என்றாள் . என்று சிறப்புங் கூறினார். தீவலிகட்டல் செயற்கையாதலானும் , காம நோயையும் ஒகத்துயிலால் (யோகநித்திரையால்) கட்டலாமாதலானும், அது அத்துணைச் சிறந்ததன்று. விடுதல் கருதாமை. தீயினுங் கொடியதை எங்ஙனம் ஆற்றவொண்ணு மென்பதாம்.

5 சாலமன் பாப்பையா

தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!.

7 சிவயோகி சிவக்குமார்

தொட்டால் சுடும் மற்றபடி காம நோய் போல் விலகி இருக்க சுடும் ஆற்றல் கொண்டதா தீ.

8 புலியூர்க் கேசிகன்

தன்னைத் தொட்டால் சுடுவதல்லாமல், காமநோயைப் போலத் தன்னை அகன்று தொலைவில் விலகினால் சுடுவதற்குத் தீயும் ஆற்றல் உடையது ஆகுமோ!

More Kurals from பிரிவாற்றாமை

அதிகாரம் 116: Kurals 1151 - 1160

Related Topics

Because you're reading about Pain of Separation

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature