Kural 1170

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ullampoandru ulvazhich chelkirpin vellaneer
neendhala manno-en kan.

🌐 English Translation

English Couplet

When eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim.

Explanation

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

2 மணக்குடவர்

அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(நின்கண்களின் பேரழகு கெடுகின்றமையின் அழத்தகாதென்ற தோழிக்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின் - என் அகக்கண் போன்றே காதலருள்ள நாட்டிற்குக் கடுகிச் செல்ல வல்லனவாயின்; என் கண் வெள்ளநீர் நீந்தல- என் புறக்கண்கள் இங்ஙனம் வெள்ளம்போலக் கண்ணீர் வடித்து அதில் நீந்தா. அகக் கண்ணிற்குச் செலவு உள்ளுதலே யாதலின் 'உள்ளம்' என்றும், புறக்கண்கள் அங்ஙனஞ் செல்ல வியலாமையின் 'செல்கிற்பின்' என்றும், கூறினாள். 'மன்னோ' பிற்காலத்து ஈரசைநிலைகளும் (மன்,ஓ) முற்காலத்து ஆடூஉ முன்னிலையும் (அரசே!) ஆகும். அது (செல்வது) மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ள தென்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, என்பர் பரிமேலழகர். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இக்குறளால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

7 சிவயோகி சிவக்குமார்

உள்ளம் போலவே நினைக்கும் இடம் செல்ல முடியும் என்றால் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்குமோ என் கண்.

8 புலியூர்க் கேசிகன்

என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கே இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே!

More Kurals from படர்மெலிந்திரங்கல்

அதிகாரம் 117: Kurals 1161 - 1170

Related Topics

Because you're reading about Languishing in Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature