உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.
Transliteration
unalinum undadhu aral-inidhu kaamam
punardhalin oodal inidhu.
🌐 English Translation
English Couplet
'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.
Explanation
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
2 மணக்குடவர்
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும். ('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) உணலினும் உண்டது அறல் இனிது- மாந்தர்க்கு உணவுத்துறையில், பின்னுண்பதினும் முன்னுண்டது செரித்தல் இன்பந்தருவதாம்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோல அவர்க்குக் காமவின்பத் துறையில் , மேற்புணர்வதினும் முன்னைத் தவறுபற்றி மகளிரூடுதல் இன்பந்தருவதாம். பசித் துண்ணுமிடத்து இன்சுவைத்தும் மிகவுண்ணலுமாயிருத்தல்போல், ஊடலாற் பிரிந்து கூடுமிடத்துப் பேரின்பத்தும், ஆராமையுள்ளது மாயிருக்குமென்று தன் பட்டறிவு கூறியவாறு.
5 சாலமன் பாப்பையா
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
6 கலைஞர் மு.கருணாநிதி
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
7 சிவயோகி சிவக்குமார்
உண்பதிலும் உண்டது செரித்தல் இனிமையானது காமம் புணர்வதிலும் ஊடல் இனிமையானது.
8 புலியூர்க் கேசிகன்
உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தை விட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது!
More Kurals from ஊடலுவகை
அதிகாரம் 133: Kurals 1321 - 1330
Related Topics
Because you're reading about Joy of Reconciliation