Kural 1096

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uRaaa thavarpoal solinum seRaaarsol
ollai uNarap padum.

🌐 English Translation

English Couplet

Though with their lips affection they disown,
Yet, when they hate us not, 'tis quickly known.

Explanation

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

2 மணக்குடவர்

கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.

3 பரிமேலழகர்

(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தோழி சேட்படுத்தியவழி அவள் குறிப்பறிந்த தலைவன் தன்னுள்ளே சொல்லியது.) உறாதவர் போல் சொலினும் - புறத்தில் அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாராயினும்; செறார் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்திற் பகையில்லாதவர் சொல் பின்பயன் படுதல் குறைவேண்டியவரால் விரைந் தறியப்படும். சேட்படுத்தலாவது, தலைமகன் தலைமகள் ஆகிய இருவரின் காதல் நிலைமைகளையும் முற்றுந் தெளிவாக அறிதற் பொருட்டும், தலைமகளை அருமைப்படுத்தற் பொருட்டும், தோழி தலைமகனை நெருங்க வொட்டாது சில நாள் நீக்கிவைத்தல். அங்ஙனம் சேட்படுக்கும்போது, எம் உறவினர் கடுங்கண் மறவர் என்றும், இவ்விடம்காவன் மிகுதி யுடைமையால் வரத்தகாது என்றும் அன்பிலாதவள் போலக் கடுஞ்சொற்களைச் சொல்லுதல் மரபு. ஆயினும், தலைமகன் அறிவுடையனாதலின், அத்தகைய சொற்களால் தளராது, தன் குறை முடிக்கக் கருதியே சேட்படுக்கின்றமை குறிப்பாலறிந்து, உலகியல்மேல் வைத்துக் கூறியதாகும் இக்குறட் கூற்று. இது வருகின்ற குறட்கும் ஒக்கும். 'செறார்' எனவே அன்புடைமை பெறப்படும். 'உறாஅ(தவர்),'செறா அர்' என்பன இசைநிறை யளபெடைகள். 'போல்' என்பது உண்மையில் உறாதவரன்மையைக் காட்டும். உம்மை எதிர்மறை.

5 சாலமன் பாப்பையா

(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

7 சிவயோகி சிவக்குமார்

உறவற்றவர் போல் பேசினாலும் விட்டு விலகாத சொல் விரைவில் உணரப்படும்.

8 புலியூர்க் கேசிகன்

புறத்தே நம்மை விரும்பாதவரைப் போலச் சொன்னாரானாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும்.

More Kurals from குறிப்பறிதல் Love

அதிகாரம் 110: Kurals 1091 - 1100

Related Topics

Because you're reading about Reading Signs of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature