Kural 680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uRaisiRiyaar uLnhatungal anjik kuRaipeRin
koLvar periyaarp paNindhu.

🌐 English Translation

English Couplet

The men of lesser realm, fearing the people's inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head.

Explanation

Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

2 மணக்குடவர்

உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர். இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.

3 பரிமேலழகர்

உறை சிறியார் - ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி -தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார் - அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். (இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உறைசிறியார்-சிறிய ஆள்நிலத்தை யுடைய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி-வலிய பகைவர் வந்து தம்மைத்தாக்கிய விடத்துத் தம் நாட்டிலுள்ள குடிகள் நடுங்குவது கண்டுஅஞ்சி; குறைபெறின்-பகைவருடன் ஏதேனுமொரு வகையில் உடன்படிக்கை செய்துகொள்ள வாய்க்குமாயின்; பெரியார்ப்பணிந்து கொள்வர்-அவ்வலிய பகைவர்க்குத் தாழ்ந்து அவர் கூறுங் கட்டுத்திட்டங்களை ஏற்றுக்கொள்வர். இது மிகுமெலியன் செயல். வேறு வழியின்மையால் பகைவருக்கு அடங்க வேண்டியதாயிற்று. 'உறை' முதனிலைத் தொழிலாகுபெயர். உறையும் இடம் உறை. அது நாடும் அரணுமாம். 'உள்' இடவாகு பெயர். கொடுங்கோல் மன்னர் நாட்டைக் கைப்பற்ற விரும்புவரா தலின், குறைபெறும் அருமை நோக்கிப் 'பெறின்' என்றார். வலியவனுக்குப் பணிந்து திறைகொடாவிடின் அரசு மட்டுமன்றி உயிரையும் இழக்கநேரு மாதலின், பெருங்கேட்டினும் சிற்றிழப்பு நன்றென்றார். ஆயினும், பகைவர்க்குப் பணிதல் தன்மானக் கேடாதலின், அதை எதிர்முக ஏவலாகக் கூறாது படர்க்கை வினையாக உலகியல் மேல் வைத்துக் கூறினார். 'உறைசிறியார்' என்றது, "உயர்திணை தொடர்ந்த பொருள்முத லாறும் அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின." (நன். 377) என்னும் நெறியீட்டைத் தழுவியதாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

சிறிய நாட்டின் அமைச்சர் தம்மின் வலியவரால் எதிர்க்கப்பட்ட போது தம்முடைய பகுதிகள் நடுங்குவதற்கு அஞ்சி, அந்நிலைக்கு வேண்டுவதான பொய்ப்பு உண்டானால் அவலரத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்ளுவார்கள்.

6 சாலமன் பாப்பையா

சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

8 சிவயோகி சிவக்குமார்

உடன் இருப்போர் அஞ்சி நடுங்கும் குறையை அறிந்து, பெரியார் என்றும் பணிந்துக் கொள்வர்.

More Kurals from வினைசெயல்வகை

அதிகாரம் 68: Kurals 671 - 680

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature